திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகாத வழக்குரைஞருக்கு எதிராக நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது.
மணப்பாறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருபவர் கே. பழனிச்சாமி. கடந்த பிப். 26 ஆம் தேதி மணப்பாறை சிவில் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வியாழக்கிழமை காலை விசாரணைக்காக மேற்படி வழக்குரைஞர் பழனிச்சாமி விசாரணைக்கு ஆஜராகாததன் காரணமாக வழக்கை மதிய இடைவேளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மதியமும் ஆஜராகாததன் காரணமாக மேற்படி பழனிச்சாமிக்கு எதிராக பிணையில் வர முடியாத பிடிஆணை பிறப்பித்து மணப்பாறை குற்றவியல் நடுவர் எம். தர்மபிரபு உத்தரவு பிறப்பித்தார். மேலும், குற்ற வழக்கு பதிவு செய்ய மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.