பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.வி.என்.ரமேஷ், செயலாளர் ஆர்.ராஜசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் பெறும் நடைமுறை இருந்து வந்தது.தற்போது இந்த முறை மாற்றியமைக்கப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் நீதிமன்றத்திலேயே பெறுவதற்கான நடைமுறைகளை அரசு செய்ய வேண்டும், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு வழக்குகள் ஆகியனவற்றை சமரசத்தீர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லாமல் நீதிமன்றத்திலேயே நடத்தி முடிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்றப் பணிபுறக்கணிப்பு நடைபெற்றது என்றனர்.
வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை நீதிமன்ற வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.