அன்புகாட்டிய வீட்டில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிட்ட அணில்குட்டி அப்பகுதி மழலையர்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், சரண்யா தம்பதி. செந்தில்குமார் முறுக்கு வியாபாரி. கடந்த மாதம் இவரது வீட்டருகேயிருந்த வேப்பமரத்திலிருந்து தாயைப் பிரிந்த அணில் குட்டி செந்தில்குமார் வீட்டில் தஞ்சமடைந்தது.
அங்கு அவரின் குழந்தைகள் தீபிகா, தனுஷ்கா ஆகியோருடன் விளையாடத் தொடங்க, குழந்தைகள் தாங்கள் வைத்திருந்த பழங்களை அணிலுக்கு கொடுத்து உள்ளனர்.
இதையடுத்து மழலையர்களின் பாசத்தில் தினமும் வீட்டுக்கு வந்து அவர்களுடன் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது அந்த அணில். குழந்தைகள் அளிக்கும் பால், பிஸ்கட்டை சாப்பிடுகிறது. வீட்டில் உள்ள அனைவரின் மீதும் ஏறி விளையாடுகிறது. அண்டை வீட்டுக் குழந்தைகளிடமும் பழகத் தொடங்கியுள்ளது. வீட்டில் மேற்கூரையின் ஒரு பகுதியை தனது உறக்கத்திற்கான இடமாக வைத்துள்ள இந்த அணில் குட்டி, அருகிலுள்ள மரம் உள்பட பகலில் எங்கு சுற்றித் திரிந்தாலும் இரவில் மட்டும் நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வந்துவிடுகிறதாம்.