ஸ்ரீரங்கம் கோயில்உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது ரூ. 19,500-ஐ திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் என 100 பேர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கேமிரா பதிவை பார்த்தபோது, ஒருவர் உண்டியல் ரொக்கம் ரூ. 19,500-ஐ எடுத்து மறைத்து வைப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸில் கோயில் மேலாளர் புகார் அளித்தார்.
விசாரணையில் அந்த நபர், அரியலூர் மாவட்டம் செந்துறை சுந்தர் நகரைச் சேர்ந்த ரவி(47) என்று தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 19 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. ரவியைப் போலீஸார் கைது செய்தனர்.