திருச்சியில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவைச் சேர்ந்த சோலை மகன் ரமேஷ்(34) என்பவர் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். எடமலைப்பட்டி புதூர் புதுத்தெரு நாகராஜன் மகன் நந்தகுமார்(25). இவர் தனது இருசக்கர வாகனத்தை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தியிருந்தார். இதே போல சிவகங்கை மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலிகிராமம் குருசாமி மகன் தாஸ்மோகன்(32) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை ரயில்நிலையம் செல்லும் வழியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகில் நிறுத்தியிருந்தார். இவர்கள் 3 பேரும் தங்களது இருசக்கர வாகனத்தைக் காணவில்லையென தனித்தனியாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இதேபோல், திருச்சி மின்வாரிய அலுவலக சாலையில் வசித்து வரும் நடராஜன் மகன் செந்தில்குமார்(45). இவர் தனது இல்லம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லையென கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.