தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், திருச்சியில் ஓய்வூதியர்களுக்கான இலவச சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஐயப்பநகர் பட்டேல் தெருவில் உள்ள கிளைச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சங்கத்தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் டி. ராஜாராமன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம். சிராஜுதின், ஓய்வூதியர் இலவச சேவை மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சங்க கிளை துணைத் தலைவர் என். நாகராஜன், பொருளாளர் கல்யாணராமன், மாவட்ட இணைச் செயலர் மதிவாணன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இந்த சேவை மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஓய்வூதியர்களுக்கு அரசிடம் பெற வேண்டிய சலுகைகள் மற்றும் சான்றுகளை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுத்தரப்படும்.