துறையூர் அருகே மனிதக் கழிவு தொட்டிக்குள் தவறி விழுந்த கருவுற்ற பசு மாடு சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
சிறுநத்தம் பெருமாள்பாளையம் சாலை பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீம் மனைவி மதார்அம்மாள். இவருக்குச்
சொந்தமான பசுமாடு கருவுற்றிருந்தது. சனிக்கிழமை அந்த பசு பெரியமாரியம்மன் கோயில் தெரு வழியே மேய்ச்சலுக்கு சென்ற போது பொன்னரசி என்பவருக்கு சொந்தமான வீட்டு முன்பு இருந்த மனிதக் கழிவு(செப்டிக் டேங்க்) தொட்டி மீது ஏறியது. அப்போது தொட்டியின் மூடப்பட்ட பகுதி இடிந்தது.
இதனால் பசு மாடு 7 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்தது. 3 அடி அகலமே இருந்ததால் அந்த மாடு அசைய முடியாமல் உயிருக்கு போராடியது.
தகவலறிந்து துறையூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பி. பாலசந்தர் தலைமையில் 7 வீரர்கள் அங்கு சென்று ஜேசிபி உதவியுடன் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு, கழிவுநீர்த் தொட்டியின் பக்கவாட்டில் குழி தோண்டி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.