திருச்சியில் அண்மையில் காலமான கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளரும் தமிழறிஞருமான சிந்தாமணி ப.நாகராஜன் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி கீழசிந்தாமணி பாப்பம்மாள் அன்னதான சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி எழுதமிழ் இயக்கத் தலைவர் மு.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வீ.கோவிந்தசாமி, தமிழ்ச்சங்க துணைத் தலைவர் கவிஞர். ராச.நாச்சிமுத்து, கவிஞர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொறுப்பாளர் நா.பாலமுருகன் வரவேற்று பேசினார். சிந்தாமணி ப.நாகராஜனின் உருவப்படத்தை முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி திறந்து வைத்து அவரது தமிழ்த் தொண்டு பற்றி பேசினார்.
இதனைத் தொடர்ந்து ப.நாகராஜனின் பாராட்டுக்குரிய செயல்கள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணையின் தலைவர் சா.பாப்பு பெஞ்சமின் இளங்கோ, பேராசிரியர் க.ஜான்குமார், லால்குடி அப்பு, அரிமா பட்டாபிராமன் உள்பட தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் வை.ஜவஹர் ஆறுமுகம், பைந்தமிழ் இயக்க இயக்குநர் புலவர் பழ.தமிழாளன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.