மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கால சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தொடக்க நிகழ்ச்சியாக மே 4, 5 ஆகிய தேதிகளில் அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் கே.அருணாபாலனின் ஜப்பானிய காகித மடிப்பு கலையாகிய ஓரிகாமி படைப்புகளின் கண்காட்சி நடைபெற உள்ளது.
மே 6, 7, 8 ஆகிய தேதிகளில் ஓவியக்கலை தொடர்பான பயிற்சி பட்டறையும், மே 9, 10 ஆகிய தேதிகளில் கைவினைப் பயிற்சியும், மே 9 ஆம் தேதி அக்ரலிக் பெயிண்டிங்
மற்றும் பூ செய்தலும், மே 10 ஆம் தேதி போட்டோ பிரேம் ஒர்க் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து மே 11, 12 ஆம் தேதிகளில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளுதல், சுய கட்டுப்பாடு, படைப்பாற்றலை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் தொடர்பாக பயிற்சியும், மே 13, 14, 15 ஆம் தேதிகளில் சதுரங்கப் பயிற்சியும் நடக்கிறது. தொடர்ந்து 18 ஆம் தேதி சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களுடைய பெயர்களை மாவட்ட மைய நூலக தொலைபேசி 0431-2702242 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.