துறையூர் பகளவாடியைச் சேர்ந்தவர் அருண்குமார் மனைவி ஐஸ்வர்யா. இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப். 26) வீட்டிலிருந்த கற்பூரத்தை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை உறவினர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அவருடைய தந்தை பெரியசாமி மகளைப் பார்க்க சனிக்கிழமை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
மதுபோதையில் இருந்ததால் மகளை உடனடியாக பார்க்காமல் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த திண்ணையில் படுத்திருந்த அவர் இரவில், திண்ணையிலிருந்து தவறி தரையில் விழுந்தார். நெடுநேரமாக அவர் ஒரே நிலையில் கிடப்பதைக் கவனித்தவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.