திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி தூய தோமையார் ஆலயத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தூய தோமையார் ஆலயத்தில் ஏப். 25 ஆம் தேதி வியாழக்கிழமை இயேசுவின் பாடுகளின் பாஸ்காவுடன் தூய தோமையார் திருவிழா, தொடங்கியது. வெள்ளிக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா, சனிக்கிழமை உயிர்த்த ஆண்டவர் - தூய தோமையார் சந்திப்பு மற்றும் தேர்ப் பவனி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை தேரடியில் இருந்து உயிர்த்த ஆண்டவர் உத்ஸவத்துடன் புறப்பட்டது. ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முன்னதாக, பங்குதந்தை அம்புரோஸ் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடத்தினார். மலையடிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த தேரின் மீது பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் வரவேற்றனர். நகரில் உலா வந்த பெரிய தேர் மீண்டும் தேரடிக்கு வந்து நிலைகொண்டது.
நிகழ்ச்சியில் மலையடிப்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்திற்கு பிறகு மலை மேல் உள்ள தூய தோமையார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் ஷ்ர்மு, வையம்பட்டி காவல் ஆய்வாளர் அனுஷாமனோகரி ஆகியோர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அம்புரோஸ், புனித தோமா, அமலவை அருள் கன்னியர்கள், மலையடிப்பட்டி தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.