திருச்சியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி கருமண்டபம் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ராம்ஜிநகரை அடுத்துள்ள கள்ளிக்குடி, மலைப்பட்டியைச்சேர்ந்த பார்த்தசாரதி (24), நாகமங்கலம், முடிகண்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சதீஷ் (39) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்தில் திருடப்பட்ட 13 இருசக்கர வாகனங்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.