துறையூர் அருகே முருகூர் கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்வாசல் வழியே நுழைந்து பட்டப் பகலில் 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் திருடு போயுள்ளது.
முருகூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் ராஜேந்திரன்(55). இவர் அதே ஊரில் இறந்து போன ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். ஈமச் சடங்கு முடிந்து வீடு திரும்பியபோது, அவரது பழைமையான வீட்டின் பின்புற வாசற்கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இரும்பு அலமாரி இருக்கும் இடத்துக்கு அருகில் இருந்த சாவியை எடுத்து அலமாரியைத் திறந்து அதிலிருந்த 7 பவுன் எடையுள்ள தோடு, மோதிரம், சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகள், ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.