திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது.
இப்பேருந்து பீமநகர் பகுதியில் வந்த போது, குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்தனர். இதனால் பேருந்து ஓட்டுநருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தை வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றனர். இதையறிந்த பேருந்து நடத்துநர் குமரன்(53), இளைஞர்களை சமாதானம் செய்த போது, அங்கிருந்த செங்கற்களால் அவரை இளைஞர்கள் தாக்கினர். இதில் நடத்துநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பாலக்கரை போலீஸார் காயமடைந்த நடத்துநரை மீட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட பீமநகர் துர்க்கை அம்மன் தெரு வீரமுத்து(29), அமர்நாத்(25) ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.