திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கிக்பாக்ஸிங் தற்காப்புகலைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிக்பாக்ஸிங் விளையாட்டு சங்கம் சார்பில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 10 -ஆவது மாநில அளவிலான கிக்பாக்ஸிங் சாம்பியன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவர் டி.ஈஸ்வர் குமார், கிக்பாக்ஸிங் விளையாட்டு சங்கத் தலைவர் ஆர்.ரமேஷ், பொதுச் செயலர் எம்.விக்டர் குழந்தைராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பொருளாளர் ஜெய.ராஜசேகர் வரவேற்றார்.
5 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 6 முதல் 40 வயது வரை உள்ளோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 பேர் வீதம் 40 பேர் மாநில அளவில் தேர்வாகினர். இவர்கள், ஆக.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சிமாவட்ட கபடி விளையாட்டு சங்கத் தலைவர் தங்க நீலகண்டன், மல்யுத்த விளையாட்டு சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பி.ஏ.கணேசன், சர்வதேச வீரகுறஞ்சி சிலம்பம் அமைப்பின் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருச்சி அணி பெற்றது.
மாநிலத்தின் 15 மாவட்டங்களிலிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பல்வேறு தற்காப்பு விளையாட்டு அமைப்பின் பிரதிநிதிகள், கிக்பாக்ஸிங் நடுவர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.