மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எமதர்மராஜவுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் வழங்கிய இத்திருத்தலம், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. அப்பரின் பசியைப் போக்கி, அவருக்கு இங்குள்ள ஞீலிவனேசுவரர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்த தலம் இது.
இத்திருக்கோயிலின் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலையில் பல்லக்கு புறப்பாடும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் விசாலாட்சி அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.
ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், பிற்பகல் 3 மணிக்குத் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் சூர்யநாராயணன், உதவிஆணையரும், கோயில் தக்காருமான ப. ராணி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ச. முத்துராமன், திருப்பைஞ்ஞீலி, மூவராயம்பாளையம், வாழ்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் தேரோட்டத்தில் பங்கேற்று,வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது.