திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூரத் தெப்போற்ஸவம் திங்கள்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்காம் பிரகாரம் வலம் வந்து காட்சியளித்தார். 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி திருமஞ்சத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
தெப்போற்ஸவத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை கருவறையிலிருந்து சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.