திருச்சியில் காதலனைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரௌடியை போலீஸார் தேடி வருகின்றனர்.
துவாக்குடியிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பயிலும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, விடுதி நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் தனது காதலருடன் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றாராம்.
அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ரௌடி மணிகண்டன் (30), தான் போலீஸ் எனக் கூறி மாணவியின் காதலனைத் தாக்கியுள்ளார். மேலும், மாணவியை கல்வி நிறுவன வளாகத்தில் விடுவதாகக் கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டார். விடுதி வளாகத்துக்குச் செல்லாமல், கல்வி வளாகத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ரௌடி தாக்கியதில் காயமடைந்த மாணவியின் காதலன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்குச் சென்ற மாணவி, தனக்கு நடந்த விவரத்தை காதலனிடம் கூறினாராம். இதைத் தொடர்ந்து துவாக்குடி காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீஸார் வழக்குப்பதிந்து ரௌடி மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.