முதுகலை ஆசிரியர் பணிமூப்புப் பட்டியலில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் ப.தமிழ்மணியன், மாநிலப் பொருளாளர் எம்.கணேஷ் முன்னிலை வகித்தனர்.
முதுகலை ஆசிரியர் பணி மூப்புப் பட்டியலில் உள்ள குறைகளைக் களைய வேண்டும். மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில், முதுகலை ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை தேதியின் அடிப்படையான கருத்தை கொண்டு பட்டியல் வெளியிட வேண்டும்.
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்தில் தகுதி பெற்ற ஆசிரியர்களின் முழு பட்டியலை வெளியிட வேண்டும். மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்தில் பணி நியமன விதியின் அடிப்படையில் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநிலத் துணைத் தலைவர் மா.குமரவேல் வரவேற்றார். நிறைவில், திருச்சி மாவட்டச் செயலர் குணசீலன் நன்றி கூறினார்.