திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முறையாக குடிநீர் விநியோகிக்கோரி செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அய்யப்பன்நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் பலனில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க் கிழமை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அய்யப்பன் நகர் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ராக்கம்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். முசிறி ஊராட்சி ஒன்றியம், பேரூர் ஊராட்சிக்குட்பட்ட ராக்கம்பட்டி கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக போதிய குடிநீர் விநியோகிக்கவில்லை என துறை சார்ந்த அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு, முசிறி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.