சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி , கோட்டை, பதுவை நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர் தம்பதியரின் 9 வயது சிறுமியை, கடந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி பிற்பகலில்
மர்மநபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அ. முத்தமிழ் என்கிற முத்தமிழ்ச் செல்வன் (50) என்பவரை கடந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தொடர்ந்து வழக்கு நடைபெற்ற நிலையில் இரு தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சி விசாரணைகள் முடிந்து இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட நிலையில் குற்றவாளியான முத்தமிழ்ச் செல்வனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வனிதா தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பு சட்டம் - போக்ஸோ (2012) சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.