கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு குற்றவாளி திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (60). இவரது மகன் நல்லதம்பி (42). அதே பகுதியில் உள்ள குளத்தை அதே ஊரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பயிரிட்டு வந்தது தொடர்பாக நல்லதம்பி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் ஜூலை மாத இறுதியில் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 29 ஆம் தேதி காலை முதலைப்பட்டியைச் சேர்ந்த ரௌடி ஜெயகாந்தன் தலைமையிலான 8 பேர் வீரமலை, நல்லதம்பி ஆகிய இருவரையும் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயகாந்தன் உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம் முன்னிலையில் இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதலைப்பட்டியைச் சேர்ந்த நடராஜன்(61) புதன்கிழமை சரணடைந்தார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.