வைகை விரைவு ரயிலை திண்டுக்கல், மணப்பாறையில் கூடுதல் நேரம் நின்று செல்ல அனுமதிக்கக்கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் தெற்கு ரயில்வே திருச்சி கூடுதல் கோட்ட மேலாளர் ஹரீஷிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருச்சி-திண்டுக்கல்-மதுரை ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கட் மனுவில் கூறியிருப்பதாவது: வைகை விரைவு ரயில் மூலம் தினசரி திரளானோர் திருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வைகை ரயிலில் முன்பதிவு இல்லாத 6 ரயில் பெட்டிகள் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு, மணப்பாறை, திண்டுக்கல்லில் ஓரிரு நிமிடங்களே நின்று செல்கிறது. இதனால், குறிப்பிட்ட நிறுத்தங்களில் பயணிகள் ரயில் பெட்டிகளில் ஏறுவதில் மிகுந்து சிரமத்துக்குள்ளாகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும். மேலும், திருச்சியிலிருந்து மதுரைக்கு கூடுதல் ரயில்கள் அல்லது சென்னையில் இயக்கப்படுவதுபோல், திருச்சியிலிருந்து மதுரைக்கு மின்தொடர் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.