ஸ்ரீரங்கம் மேலூர் மூலத்தோப்பில் புதிதாக மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் மேலூர் மூலத்தோப்பு பகுதியில் புதன்கிழமை புதிய நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் திறந்து வைத்து மேலும் பேசியது:
இந்த புதிய நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம், பேட்டைவாய்த்தலை, கொள்ளிடம் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்குகள் மற்றும் ஜே.எம். 3, 4 ஆகியவற்றில் உள்ள 1, 200 உரிமையியல் வழக்குகள் மற்றும் 800 குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2,000 வழக்குகள் விசாரிக்கப்படும்.
மேலும் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மணப்பாறை நீதிமன்ற நீதிபதி, சிவகாம சுந்திரி புதிய நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குகள் விசாரணை நடத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரமேஷ் நடராஜன், குற்றவியல் வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம். விக்கிரமாதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.