கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி முதல் கீழமுல்லைக்குடியில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது. தற்போது காவிரியில் தண்ணீர் வருவதால் மணல் குவாரி மூடப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கிளியநல்லூர், மாதவபெருமாள் கோயில், தாளக்குடி, கூகூர், திருவளர்சோலை ஆகிய இடங்களில் மணல் குவாரி திறக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு இடங்களி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருவெறும்பூர் ஒன்றிய மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலர் ஆர். ராஜா, திருவெறும்பூர் ஒன்றிய செயலர் நடராஜன், சிஐடியூ புறநகர் மாவட்ட செயலர் கே.சிவராஜன், காட்டூர் பகுதி செயலர் மணிமாறன், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலர் கே.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.