ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள மூலவர் நம்பெருமாளின் திருவடிசேவை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமேணி சுதை வடிவமானதால் ஆண்டுக்கு இரு முறை தைலக்காப்பு சாத்தபடும். கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் தைலக்காப்பு சாத்தப்பட்டது.
அன்றுமுதல் பெருமாளின் முகத்தை மட்டும் பக்தர்கள் தரிசித்துவந்தனர். மற்ற அனைத்து பகுதிகளும் உலர்வதற்காக மெல்லிய துணியால் 48 நாள்கள் போர்த்தபட்டிருந்தது. இந்நிலையில், 48 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிக்கிழமை புணுகுகாப்பு சாத்தப்பட்டது. இதையடுத்து நம்பெருமாளின் திருமேணி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு தங்கத் திருவடிசேவை மாலை 3.30 மணி முதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.