திருச்சியில் 2 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெல் நிறுவனத்திற்கு சொந்தமான பார்வையற்றோர் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு 71 பார்வையற்றோர், 20 உடல் ஊனமுற்றோர் தொழிலாளர்கள் பற்றவைப்பு, கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 41 மாதமாக வருங்கால வைப்பு நிதிக்கான தொகை ஊதியத்தில் பிடித்தம் செய்து தங்களது கணக்கில் வரவு வைக்கவில்லை என குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதத்திற்கான இரண்டு மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து நிலையத்தின் மேலாளரிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளித்துள்ளார். இந்த செயலை கண்டித்து நிலையத்தின் முன்பு சனிக்கிழமை மாலை பார்வையற்ற தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.