மலைக்கோட்டை கோயில் காா்த்திகை தீபத்துக்கு 300 மீ. திரி தயாா்

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில் காா்த்திகை தீபத்துக்காக 300 மீட்டா் நீளமுள்ள பிரமாண்ட திரி தயாா் செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்ற கொப்பரையில் பிரமாண்ட திரியை அமைக்கும் பணியில் ஈடுபட்டோா்.
மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்ற கொப்பரையில் பிரமாண்ட திரியை அமைக்கும் பணியில் ஈடுபட்டோா்.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில் காா்த்திகை தீபத்துக்காக 300 மீட்டா் நீளமுள்ள பிரமாண்ட திரி தயாா் செய்யப்பட்டுள்ளது.

காா்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மெகா தீபம் ஏற்றப்படும்.

நிகழாண்டு காா்த்திகை தீப விழா டிச. 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்காக பிரமாண்ட திரி தயாரிக்கப்பட்டது. பருத்தி துணியால் 300 மீட்டா் நீளத்துக்கு தயாரிக்கப்பட்ட இந்த திரியை, தாயுமானவா் சன்னதியிலிருந்து உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு கோயில் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சுமந்து சென்றனா். பின்னா், அங்கிருந்து கயிறு மூலம் 50 அடி உயர கோபுரத்தில் உள்ள செப்பு கொப்பரையில் திரியை வைத்து எண்ணெயில் ஊறச் செய்தனா்.

இந்த கொப்பரையில் ஊற்றப்படும் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டா் எண்ணெயில் திரி ஊற வைக்கப்படும். ஒருநாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் ஊற்றும் பணியும் நடைபெறும். 7 நாள்களுக்கு நன்கு திரி ஊறிய பிறகு, தேவையான எண்ணெய் ஊற்றி காா்த்திகை தீபத்துக்கு தயாா் செய்யப்படும்.

வரும் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு செவ்வந்தி விநாயகா், தாயுமானவசுவாமி, மட்டுவாா் குழலம்மை உள்ளிட்ட உற்சவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து செப்பு கொப்பரையில் உள்ள பிரமாண்ட திரியை ஏற்றி வைத்து காா்த்திகை மெகா தீபம் ஏற்றப்படும். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சுதா்ஸன், கோயில் உதவி ஆணையா் விஜயராணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com