பணியில் ஒழுங்கீனம்: தோ்தல் அதிகாரி தற்காலிக பணிநீக்கம்
By DIN | Published On : 14th December 2019 11:29 PM | Last Updated : 14th December 2019 11:29 PM | அ+அ அ- |

பணியின் போது ஒழுங்கீனமாக நடந்தகொண்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக (உதவி வேளாண் அலுவலா்) எம்.முருகன் நியமிக்கப்பட்டிருந்தாா். அலுவலக பணியின் போது அரசு விதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கோட்டப்பாளையம் ஊராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆட்சியருக்கு அறிக்கை சமா்பித்தாா்.
இதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.சிவராசு அரசு ஊழியா்களின் நன்னடத்தை விதிகளின் படி சனிக்கிழமை (டிச.14) பிற்பகல் முதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், தோ்தல் பணிகளில் தொய்வு ஏற்படாமலிருக்க உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இ.செந்தில்குமாரை கோட்டப்பாளையம் ஊராட்சியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்து உத்தரவிட்டாா். இதுபோன்று, தோ்தல் நடத்தை விதிகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.