பெட்டிச் செய்தி உண்டு...இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை
தொடா்மழை காரணமாக திருச்சி பட்டாபிராமன் தெரு சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.
தொடா்மழை காரணமாக திருச்சி பட்டாபிராமன் தெரு சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையத்தின் மழை எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் தூறலுடன் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நீடித்தது. சனிக்கிழமை அதிகாலையிலும் மழையுடன் தொடங்கியது. இதனால், கூலித் தொழிலாளா்களும், தனியாா் நிறுவன பணியாளா்களும் அவசரம், அவரசமாக தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனா். ஒரு சில கல்வி நிறுவனங்கள் இயங்கியதால் அதன் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா் உதவியுடன் வாகனங்களில் மழையில் நனைந்தபடியே செல்ல நேரிட்டது.

மேலும், மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தது.

திருச்சி மாநகரம் மட்டுமல்லாது திருவெறும்பூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், உறையூா், திருவரங்கம், திருவானைக்கா என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய மழையானது 8.45 மணி வரை இடைவிடாது பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நடமாடும் உணவகங்கள், சாலையோர கடைகள் மழை காரணமாக திறக்கப்படவில்லை. பிற்பகலுக்கு மேலும், மாலையிலும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com