திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, உதவி வேளாண் அலுவலர் முருகன் நியக்கப்பட்டிருந்தார்.
இவர் நேற்று பணியின் போது மது போதையில் இருந்ததாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளித்தனர். அவர் நடத்திய விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் சு.சிவராசுவிடம் சமர்பித்தார்.
இதையடுத்து கோட்டப்பாளையம் கிராம ஊராட்சி வேட்பு மனுத்தாக்கல் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் சிவராசு சனிக்கிழமை உத்தரவு விட்டார்.
தேர்தல் பணிகள் தொய்வின்றி நடக்க புதிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.