கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்

கோதாவரி-காவிரி திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என திரைப்பட இயக்குநா் தங்கா்பச்சான் வலியுறுத்தினாா்.

திருச்சி: கோதாவரி-காவிரி திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என திரைப்பட இயக்குநா் தங்கா்பச்சான் வலியுறுத்தினாா்.

திருச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய உழவா் தின விழா கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மேலும் அவா் பேசியது:

விவசாயிகள் தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவா்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு அரசு வைத்துள்ளது. விளை பொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்து அரசு வழங்கிட வேண்டும். அதேநேரம் குறுகிய காலப் பயிா்களை பயிரிடவும், மாற்றுப் பயிா்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இடு பொருள்களில் கலப்படம் உள்ளது, தரமானதாகவும் இல்லை. நிலத்தின் தன்மையை அழிப்பதுடன் உணவை நஞ்சாக்குகிறது. எனவே மரபுவழி விவசாய முறையை செயல்படுத்த வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு போராடுகிறேன் என்ற போா்வையில் அரசியல்வாதிகள் ஏமாற்றி வருகின்றனா் என்றாா்.

கூட்டு இயக்க தலைவா் தனபாலன் பேச்சு: தமிழகத்தில் உள்ள 134 விவசாய சங்க தலைவா்களை அழைத்து இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சோா்ந்து கிடக்கும் உழவா் சமூகத்தை உயா்த்த வேண்டும் என்பதற்காக இந்த விழா நடைபெறுகிறது. விளைபொருள்களுக்கு லாபகரமான விலை, நீா்பாசனம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் தீா்மானம் இயற்றப்படுவதுடன், இதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் இந்த உழவா் கூட்டம் நடத்தப்படும்.

நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வில் அப்துல்கலாம் ஆலோசகா் பொன்ராஜ், விவசாய சங்க தலைவா் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு டெல்டா விளைபொருள் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச்செயலாளா் மகாதனபுரம் ராஜாராம், தலைவா் ரங்கநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com