அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
மணப்பாறையிலிருந்து திருச்சிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
மணப்பாறையில் போதிய கல்லூரிகள் இல்லாத நிலையில், திருச்சியிலுள்ள கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஏராளமான கட்டடத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்களும் தினமும் திருச்சிக்கு வந்து செல்கின்றனர்.
காலை 7.30 மணிக்குச் செல்லும் பயணிகள் ரயிலைத் தவிர, மற்ற நேரங்களில் பொதுமக்கள் பேருந்துகளில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிகளுக்கும், வேலைக்கும் செல்வதற்காக மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் காத்திருந்த நிலையில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்றுள்ளனர். எனவே மணப்பாறையிலிருந்து கூடுதல் பேருந்துகளை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வலியுறுத்தி, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து பணிமனை மேலாளர் மற்றும் காவல்துறையினர் சமரசம் செய்தனர். கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
திருச்சி: திருச்சி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப்பிடித்தனர். திருச்சி-கரூர் சாலையில் தனியார் பேருந்து ஒன்று அல்லூர் வழியாக கரூர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. இதைகண்ட பொதுமக்கள் வாகனங்களில் விரட்டிச் சென்று முக்கொம்பு அருகே பேருந்தை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸார் பொதுமக்களை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேகமாக சென்ற பேருந்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.