மாணவ, மாணவிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, இடைவேளையின் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வையம்பட்டி அருகிலுள்ள கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஊக்குவித்து வருகிறது.
கிராமப்புற மாணவ, மாணவிகள் சுமார் 647 பேர் பயிலும் இப்பள்ளியில் 27 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் பணியாற்றி வருகிறார்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பொதுவாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து வருவதாகவும், அதனால் ஏற்படும் உடல்நலமின்மையைச் சீரமைக்கும் வகையிலும் பள்ளித் தலைமையாசிரியர் இந்த புதிய முறையை செயல்படுத்தினார்.
அதன்படி, மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பாட்டிலில் குடிநீரை எடுத்து வர வேண்டும். வழக்கமான இடைவேளை காலத்துக்கு முன்பாக மாணவ, மாணவிகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். அப்போது அந்தந்த வகுப்பறைகளில் ஆசிரிய, ஆசிரியைகள் முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதன்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடைவேளையின் போதும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பள்ளி நேரத்தில் மட்டும் தினமும் 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடிக்க வைப்பதால், மாணவ, மாணவிகள் சிறுநீரகப் பிரச்னைகளிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான வாழ்வை அடையும் நிலை ஏற்படுத்தப்படுகிறது என்றார் பள்ளித் தலைமையாசிரியர்
அந்தோனி லூயிஸ் மத்தியாஸ்.