மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வை ஒரே கலந்தாய்வாக நடத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் மருத்துவர் சு. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2019 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜன.31 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அனைத்திந்திய மற்றும் மாநில அளவில் 50% இடஒதுக்கீடுக்கும், பட்டமேற்படிப்புக்கும் என மூன்று முறை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த மூன்று கலந்தாய்வும் தனித்தனியாக நடத்தப்படுவதால் காலதாமதம், அதிக செலவினம், கணினி வழிக்கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மூன்று கலந்தாய்வுகளையும் ஒன்றாக நடத்துவதால் இரண்டு மாதங்களில் கலந்தாய்வை நடத்தி முடித்து விடலாம். எனவே, தனித்தனியாக நடத்தப்படும் கலந்தாய்வை ஒருங்கிணைந்த ஒரே கலந்தாய்வாக நடத்திட மத்திய, மாநிலஅரசுகள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.