ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளியோடத் திருநாள் எனும் தெப்பத் திருவிழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். வெள்ளிக்கிழமை இரவு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.
கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தெப்பத் திருவிழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.
விழாவின் 7ஆம் நாளான வியாழக்கிழமை இரவு நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டார்.
திருக்கொட்டாரத்தின் எதிரே உள்ள மண்டபத்தில் இரவு 7 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாள் முன்பு நெல் அளக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார் நம்பெருமாள். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி 0தெப்ப உற்ஸவம் கண்டருளுகிறார். சனிக்கிழமை பந்தக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.