தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, ரூ.26,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, திருச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்து வழங்க வேண்டிய ரூ.15,000 கோடி கஜா புயல் நிவாரண நிதி, ரூ.7000 கோடி ஜிஎஸ்டி வரி, ரூ.4000 கோடி வாட் வரி என மொத்தமாக நிலுவையிலுள்ளரூ.26,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
லட்சிய திமுக, ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகம், மக்கள் தேசக் கட்சி, அனைத்திந்திய உழைப்பாளிகள் முன்னேற்றக் கழகம், மதசார்பற்ற இந்திய மக்கள் கட்சி, மக்கள் நலக்கழகம், தேசிய நதிநீர் பாதுகாப்புக் கழகம், முஸ்லிம் முன்னேற்றக்கழகம், முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழகம், ஜீவா கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, மவுலானா சதக்கத்துல்லா தலைமை வகித்தார்.
முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகப் பொதுச்செயலர் இஸ்மாயில் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் தங்கதுரை, ஆசைத்தம்பி, கருப்பையா, ரபீக், அமீன், ஜெய்னுலாதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.