தமிழக அரசின் நிர்ணயித்துள்ள மீட்டர் கட்டண விதிகளின்படி சென்னையில் செயல்படும் மக்கள் ஆட்டோ நிறுவனம், 400 ஆட்டோ ஓட்டுநர்களை இணைத்து திருச்சியிலும் தனது சேவையை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் ஆட்டோ நிறுவனர் ஏ. மன்சூர் அலிகான் கூறியது: தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. இத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றன. கால் டாக்ஸிகளின் ஆதிக்கம், பெரு நிறுவனங்களின் தலையீடு, கார்ப்ரேட் நிறுவனங்கள் பங்களிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் குறைந்து, தொழிலே கேள்விக்குறியாகி வருகிறது.
இந்நிலையில், அரசு நிர்ணயித்துள்ள மீட்டர் கட்டணத்தின் கீழ் மக்களுக்கு ஆட்டோ சேவை வழங்குவதற்காகவே மக்கள் ஆட்டோ நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொழில் பாதுகாப்பு, பயணிகளுக்கு பாதுகாப்பு இரண்டும் உறுதிபடுத்தப்படுகிறது. பெண் பயணிகளுக்கு பெண் ஆட்டோ ஓட்டுநர்களே அனுமதிக்கப்படுவர். 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஆகும் கூடுதல் கிலோ மீட்டர்களில் ஒரு கி.மீ. ரூ.14 என வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கூடுதலாக 50 சத கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ சேவையும் அளிக்கப்படுகிறது. செல்லிட பேசியில் மக்கள் ஆட்டோ நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இல்லையெனில், 044-43214321 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.