திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனர்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் நாகையநல்லூர் ஊராட்சி கல்லூர்ப்பட்டி கிராமம் 2 வது வார்டில் உள்ள இரு ஆழ்துளை கிணறுடன் கூடிய மின் விசைப் பம்பு பழுதடைந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் கோபமடைந்த கல்லூர்ப்பட்டி பகுதி மக்கள் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் ஆணைக்கல்பட்டி என்ற இடத்தில் மறியல் செய்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் நாகையநல்லூர் ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சு நடத்தி அளித்த உறுதியின்பேரில் மக்கள் கலைந்து சென்றனர் மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.