திருச்சி-ஹவுரா விரைவு ரயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
திருச்சியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை இயக்கப்படும் ஹவுரா அதிவேக விரைவு ரயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டு பிற்பகல் 4.20 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் உத்கிரிஷ் திட்டத்தின் கீழ் இதுபோன்ற அதிவேக ரயில்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 60 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. அதில், கண்ணை கவரும் வகையில் எல்இடி விளக்குகள், நவீன கழிவறை, துப்புரவு வசதிகளுக்கு அழைக்கும் வசதி, சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் சிறப்பு வகுப்பு பெட்டிகள் கூடுதல் வசதிகளுடன் ஏற்கெனவே உள்ள வசதிகளும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
துப்புரவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவையெனில் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனே சேவை அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் அழைப்பு எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த இரு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் 33 அதி வேக ரயில்களும் இதுபோன்று வடிவமைக்க திட்டமிடப்பட்டு அதற்கென ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி கோட்டத்தில் முதன்முதலாக நவீன மயமாக்கப்பட்ட வசதிகளுடன் ஹவுரா ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.