ஆடுகளைத் திருடிய 2 பேர் போலீஸில் ஒப்படைப்பு
மணப்பாறை அருகே ஆடுகளை திருட முயன்ற இருவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பியோடிவிட்டார். மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி அருகே உள்ள வடதோட்டம் பகுதியில் தனி வீடாக வசித்து வருபவர் மில் தொழிலாளி செபஸ்தியான்(46). இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சனிக்கிழமை மாலை அவரது மனைவி ரெஜினாமேரி(42) ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு பால் கறக்கச் சென்றார்.
அப்போது, ஆட்டோவில் வந்திறங்கிய 3 பேர் அவரது ஆடுகளை ஆட்டோவில் ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்ட ரெஜினாமேரி கூக்குரலிட்டார்.
இதனால் திடுக்கிட்ட மர்மநபர்கள் ஆடுகளுடன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்கள் சுமார் 10 கி.மீ தொலைவுக்கு ஆட்டோவைப் பின்தொடர்ந்து சென்று ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தில் ஒரு நபர் தப்பியோடிவிட்டார்; பிடிபட்ட இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் திருச்சி உறையூரைச் சேர்ந்த துரைசாமி மகன் நடராஜன்(35), ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(34) என்றும் தெரியவந்தது.
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய ராதா என்பவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.