உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சியில் நூறு நாள் வேலையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எரகுடி ஊராட்சியில் நுறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வேலையில்லை என்று நிர்வாகம் சார்பில் கூறினராம். இதைத்தொடர்ந்து அங்குள்ள விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பொருளாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உப்பிலியபுரம் ஒன்றியச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தகவலறிந்து உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிவாசகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளிடம் மீண்டும் வேலை வழங்க உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.