திருச்சி அரியமங்கலம் அருகே தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி 28 ஆவது வார்டு பகுதிக்குட்பட்ட அரியமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா(12),அபுதாஹிர்(34),திருவு(25)ஆகியோரை அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் கடித்தன. இவர்கள் 3 பேரும் உடனடியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில் கடந்த ஒரு மாதத்தில் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.