திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிப்போட்டு 5 பவுன் தங்க நகைகளை வெள்ளிக்கிழமை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருவாசி ஊராட்சியில் உள்ள வடக்குத் தெருவில் வசிப்பவர் செல்லம் (80). கணவர் செங்கமலம் இறந்ததும், வீட்டில் தனியே வசித்துவந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் செல்லத்தைக் காண அருகேயுள்ள வீட்டில் வசித்து வரும் அவரது மகன் அண்ணாதுரை வந்து பார்த்தபோது, வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார்.
மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் தோடு, 1 பவுன் மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு டோல்கேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்பு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வாத்தலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது குறிப்பிடத்தக்கது.