உலகம் முழுவதும் உள்ளோர், அஞ்சல் வழிக்கல்வி மூலம் திருக்குறளை கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளுவர் பிறந்தநாள் விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி தமிழச்சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முனைவர் திருமாறன் தலைமை வகித்தார். திருக்குறள் முருகானந்தம் வரவேற்றுப் பேசினார். மருத்துவர் கோபால், அறன் வலியுறுத்தல் குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்வில் முரளீதரன், ராஜகுருநாதன், ஜெயராஜ், அன்பழகன், தமிழாதன், உறந்தை செல்வம், தமிழழகன், சுப்பிரமணியன், தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்குறளை அனைவரும் நினைவு கூறும் வகையில், நீதியரசர் மகாதேவன் உத்தரவின் பேரில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் எழுதப்பட்டிருந்த திருக்குறள்கள் அண்மைக் காலமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மீண்டும் எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள அனைத்து தரப்பினரும், அஞ்சல் வழிக் கல்வி மூலம் திருக்குறளை கற்கும் வகையில், செம்மொழி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகத்திருக்குறள் பேரவை, பாவாணர் தமிழியக்கம், பைந்தமிழ் இயக்கம், தமிழ் கலை இலக்கியப் பேரவை, சிந்தனைத் தளம், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், தமிழ்ச்சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்த்தப்பட்டது.