குழந்தைகளின் விருப்பம், செயல்களை கவனிக்க வேண்டும் என்றார் பேச்சாளர் பர்வீன் சுல்தானா.
துறையூர் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் ( சிபிஎஸ்இ) ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
குழந்தை வளர்ப்பு சவாலானது. பெற்றோராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு. குழந்தைகளிடம் பேசும்போது பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. குழந்தையின் விருப்பம், செயல்களை கவனிக்க வேண்டும். தவறு செய்யும்போது வெளிப்படும் நல்ல திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்கவேண்டும்.
குழந்தைகளின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைக்கு வீடுகளில் மறுப்புத் தெரிவியுங்கள். வெற்றி, தோல்வியில் உள்ள சூட்சமத்தை அறியும் விழிப்புணர்வை குழந்தைகள் பெறவேண்டும்.
தோல்வியிலிருந்தும், அவமானங்களிலிருந்தும் மீண்டு வாழும்
திறனையும், நிராகரித்த இடத்தில் தங்களைத் தவிர்க்கமுடியாத சக்தியாக மாற்றிக்கொள்ளும் திறனையும், நம் பண்பாட்டையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பெற்றோர், ஆசிரியர்களிடம் எதையும் மறைக்காத குழந்தைகள் வாழ்வில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்வார்கள் என்றார் அவர்.
விழாவுக்கு கல்விக்குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் ஆர். செந்தூர்செல்வன், எஸ்ஆர்எம் பள்ளி முதன்மை முதல்வர் சி. ஹரி, மீனாட்சி முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, சௌடாம்பிகா பள்ளி முதன்மை முதல்வர் அ. ராமசாமி வரவேற்றார். கல்வி, விளையாட்டுகளில் வெற்றிப் பெற்று சிறப்பிடம்பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.