திருச்சி சோமரசம்பேட்டை அருகே தொழிலாளி ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சோமரசம்பேட்டை அருகே உள்ள போதவூர் , சிங்களாபுரம் மயானம் அருகே திங்கள்கிழமை மாலை ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெகுநேரம் எழாமல் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் அவ்வழியே சென்ற சிலர் அவரை எழுப்பியுள்ளனர். அப்போதுதான் அவர் வெட்டுக்காயத்துடன், கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர் கள்ளையைச் சேர்ந்த ஆ. கிருஷ்ணமூர்த்தி (45) என்பதும், அதே பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், மர்ம நபர்கள் சிலர், கிருஷ்ணமூர்த்தியின் காது மற்றும் தலைப் பகுதியில் அரிவாளால் வெட்டி சடலத்தை, மயானப் பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இறந்துபோன கிருஷ்ணமூர்த்திக்கு இரு மனைவிகளாம். ஒருவர் கள்ளையிலும் மற்றொருவர் அதவத்தூரிலும் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.