திருச்சி மண்டலத்தில் 9,243 பேர் கைது
By DIN | Published On : 29th January 2019 04:11 AM | Last Updated : 29th January 2019 04:11 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து ஏழாவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, திருச்சி மண்டலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 9,243 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாநில அளவில் ஜன. 22-ம் தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 7-வது நாளாக திங்கள்கிழமையும் இப்போராட்டம் தொடர்ந்தது. இதையொட்டி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டதாக திருச்சி மண்டலத்தில், திருச்சியில் 1,658 பேரும், அரியலூரில் 1,050 பேரும், பெரம்பலூரில் 1,010 பேரும், கரூரில் 1,325 பேரும், தஞ்சாவூரில் 1,700 பேரும், புதுக்கோட்டையில் 2,500 பேர் என மொத்தம் 9,243 பேரை போலீஸார் கைது செய்தனர்.