பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் மாறன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மோகன், செயலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியூ மாவட்டச் செயலர் ரெங்கராஜன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தரைக்கடை வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர் ஜெயபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். போராட்டத்தில், தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும், ஆட்சியர் தீர்மானித்த குறைந்த பட்ச தினக்கூலியை வழங்க வேண்டும். வேலைநீக்கம் செய்த தொழிலாளிக்கு சதீஷ்க்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர்.