திருச்சி சரக காவல் துறையில் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 10 ரெளடிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ரௌடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் 2 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேரும், கரூர் மாவட்டத்தில் 2 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும் என 10 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு காவல் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் கைதானோரில் திருச்சியில் பட்டறை சுரேஷ்,குவார்ட்டர் கோவிந்தன், புதுக்கோட்டையில் பாஸ்கர், கோபி, கவிவேந்தன், கருப்பு கார்த்தி, ரமேஷ், அரவிந்த், பெரம்பலூரில் செல்வராஜ், கரூரில் ராமச்சந்திரன், முகிலன் ஆகியோர் அடங்குவர்.
அதுமட்டுமின்றி ரெளடிகளுக்கு உதவுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டியது கடமை. தகவல் தெரிவிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
ரௌடிகள் மீதான நடவடிக்கை தொடரும். அவர்கள் மனம் திருந்தி வாழ காவல்துறை உதவ முன்வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.